திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.28 திருச்சோற்றுத்துறை
பண் - தக்கராகம்
செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
துப்ப னென்னா தருளே துணையாக
ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்
றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே.
1
பாலும் நெய்யுந் தயிரும் பயின்றாடித்
தோலும் நூலுந் துதைந்த வரைமார்பர்
மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே.
2
செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்
கைகொள் வேலர் கழலர் கரிகாடர்
தைய லாளொர் பாக மாயஎம்
ஐயர் சோற்றுத் துறைசென் றடைவோமே.
3
பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளீர்
துணிகொள் போரார் துளங்கு மழுவாளர்
மணிகொள் கண்டர் மேய வார்பொழில்
அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே.
4
பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து
மறையும் ஓதி மயானம் இடமாக
உறையுஞ் செல்வம் உடையார் காவிரி
அறையும் சோற்றுத் துறைசென் றடைவோமே.
5
துடிக ளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப்
படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே.
6
சாடிக் காலன் மாளத் தலைமாலை
சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்
பாடி ஆடிப் பரவு வாருள்ளத்
தாடி சோற்றுத் துறைசென் றடைவோமே.
7
பெண்ணோர் பாகம் உடையார் பிறைச்சென்னிக்
கண்ணோர் பாகங் கலந்த நுதலினார்
எண்ணா தரக்கன் எடுக்க வூன்றிய
அண்ணல் சோற்றுத் துறைசென் றடைவோமே.
8
தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே
அழலா யோங்கி அருள்கள் செய்தவன்
விழவார் மறுகில் விரியால் மிக்கஎம்
எழிலார் சோற்றுத் துறைசென் றடைவோமே.
9
(*)கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர்
ஓதும் ஓத்தை யுணரா தெழுநெஞ்சே
நீதி நின்று நினைவார் வேடமாம்
ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே.

(*) போதுசாற்றி என்றும் பாடம்.
10
அந்தண் சோற்றுத் துறையெம் மாதியைச்
சிந்தை செய்ம்மின் அடியீ ராயினீர்
சந்தம் பரவு ஞான சம்பந்தன்
வந்த வாறே புனைதல் வழிபாடே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com